Tuesday, August 31, 2010

அவனும் அவளும்

  பேருந்து வந்தது... புகை கக்கி நின்றது. இவனும் புகையை கக்கி அவசர அவசரமாக ஒடிச் சென்று ஏறினான். தம்பு தள்ளி நில்லுப்பு ...சிகிரட்டு வாடை எனக்கு ஆகாது என்ற பாட்டியின் பேச்சைக்கேட்காதவன் போல தன் பார்வையை பேருந்தின் எல்லா பக்கங்களிலும் சுழல விட்டான்.  முனிச்சாலை கேட்டது யாரு அடுத்த ஸ்டாப் இறங்க ரெடியா இரு என்ற நடத்துனரின் குரல் கேட்டு நான்கைந்து பேர் இருக்கையை விட்டு எழுந்துவந்தனர்.
  
 பேருந்து சுமக்க முடியாமல் பயணிகளை சுமந்தது. நிறைமாத கர்பிணி கூட இப்படி சுமக்க மாட்டாள். சாய்ந்து செல்லும் பேருந்து பயணிகளுடன் காதலையும்,பல கதைகளையும் சுமந்து சென்றது. நடத்துனரின் விசில் சத்தம்... காற்றில் கரைந்து ஓட்டுனரின் காதில் விழுந்து பேருந்தை மட்டும் நிறுத்தவில்லை..அவனின் பார்வையையும் நிறுத்தச் செய்தன.பேருந்து மட்டும் பயணிக்க வில்லை..அதனுடன் அவளும் அவனும் பார்வைகளை பாஸைகளாக்கி பயணித்தார்கள் .
எம்பா நானும் தான் பார்க்கிறேன் எப்புட்டு நாலுதான் இப்படியே பார்த்துகிட்டு இருப்பீங்க
எப்ப பேசப்போகிறீங்க என்ற கொந்தகைப்பாட்டியை ...ஆத்தா ...உன் பேத்தி சம்ஞ்சதும் தான் பேசுவாள் போல ...என்ற அவனின் பேச்சுக்கு அனைவரும் சிரிக்க ..எலே எம்பேத்தி சம்ஞ்சு பிள்ளை பெத்துபோட்டுட்டாடா...கிறுக்கு பயலே...என்றவுடன் அவள் தன் அழகிய இதழ் விரித்து ...பல் தெரியசிரித்தாள்.விசில் சத்தம் கேட்டவுடன் தம்பு சிம்மக்கல் வந்திருச்சு காய்கறி பையை தூக்கி தா... என்று இறங்கி சென்றாள்.

         அண்ணா சிலையை ரவுண்டு அடித்து பஸ் மேம்பாலத்தில் ஏறியது...இல்லை இல்லி திணறியது. இன்னிக்கு பஸ் வேற மக்கர் பண்ணுது... கல்லூரியின் முதல் பெல் அடிக்க இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கு.. என்ற அமெரிக்கன் கல்லூரி மாணவனை முறைத்தான்.. இன்னும் பிளஸ் டூ பசங்க மாதிரி ..கொஞ்சமாவது திருந்துங்கடா என்றான். அவன் வாய் முகூர்த்தம் பேருந்து நின்றது. நடத்துனர் தம்பிகளா இறங்கி வந்து தள்ளுங்கப்பா.. என்றார். மீனாட்சி கல்லூரி குயில்கள் இனிமையாய் இட்ஸ் டூ லேட் ஷால் வீ கோ பை வால்க் என்று பீட்டர் விட ... அட பாத்துமா கால் வலிக்க போவுது என சிவப்புக் கலர் சட்டைபோட்ட ஒரு நோட்டு மட்டும் சுமந்தவன் சொல்ல ..ஏன் தலையில சுமந்து தூக்கிட்டு போறது...தங்கச்சி பாசம் ரெம்பத்தான் என்றவளை ... மாப்பிள ..உன் தங்கச்ச்சியா ..நான் வேணுமிண்ணா தள்ளிகிட்டு போகட்டா..என்ற மஞ்சள் சட்டையை முறைத்துச் சென்றன குயில்கள்.

         அனைவரும் பேருந்தை முன்னோக்கி தள்ள .. உள்ளே இருந்த ஒரு பெரியவர் இளசுகளின் அலும்பைப் பார்த்து சற்று பின்னோக்கி சென்றார். நம்ம அலமேலுவை அந்த காலத்தில் கிராமத்திலிருந்து நகரப் பள்ளிக்கு வரும் போது எவ்வளவு இனிமையாக வயல் வெளியில் ஒருவருக்கு ஒருவர் அணுசரணையாக பேசிக் கொண்டு ..கள்ளம் கபடம் இல்லாத அந்த சிரிப்பை ரசித்து.. காதல் வந்தாலும் அதை ஒருவருக்கு ஒருவர் காட்டி கொள்ளாமல் ஒரு தோழமையுடன் ...சரி கிருஸ்ணா நான் போறேன்..நீ வயல் வேளை முடித்துவிட்டு சாய்ங்காலம் வா...பேசுவோம்...என்று சிரித்துச் செல்லும் அலமுவை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் இந்தகாலத்து பொண்களுக்கு கபட சிரிப்பு இருப்பதாகவே நினைத்தார். என்ன பெரிசு ..யோசனை.. தள்ளி உட்கார் பஸ் கிளம்பிடுச்சு...என்றவனுக்கு இடம் கொடுத்தார். இருந்தாலும் கிளம்பிய பேருந்துடன் அவர் நினைவுகளுடனே பயணித்தார்.

        அய்யோ என் பணம் என் பர்ச பாத்திங்கலா... என்றவனை அனைவரும் பார்த்தனர். தம்பி கீழ பாருங்க ...இல்லை .. என்றான். தன் கலங்கிய கண்களுடன் சார் யாரும் என் பர்ச பார்த்திங்களா.. ? வண்டி தள்ளும் போது எவனே பிக்பாக்கெட் அடிச்சுட்டான் என்றான். என் அம்மா கடன் வாங்கி செமஸ்டர் பீஸ் கட்ட கொடுத்தது ...என கண்ணீருடன் சொல்ல...பாவம் எடுத்தவன் உருப்பிட மாட்டான்... நாசமாத்தான் போவாங்க என நாலைந்து நடுத்தர பெண்மணிகள் சாபமிட ... பறிகொடுத்தவன் மனதிற்குள் எதையோ புலம்பியவனைப்போல இருந்தான். எத்தனைத் தடவ சொல்லுறது... பிக்பாக்கெட் ஜாக்கிரதைன்னு ... நமக்கு தான் கவனம் வேணும் ..இப்ப வருத்தப்பட்டு என்ன பண்ணா போன வாரம் ஐந்து சவரண் நகையை கட் செய்துட்டான்.. என நடத்துனர் சொன்னது தான் தாமமதம் அனைவரும் தம் கழுத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டனர். பெண்கள் புடவையை கழுத்தை மறைத்து சுற்றிக் கொண்டனர்.

   என்னப்பா பஸ் மேம்பாலத்தை விட்டு நகர மாட்டீங்குது....திடீர் பந்த் நடக்குதாம்... தேவர் சிலையை மறைத்து எதிர்கட்சியினர் சாலை மறியல் பண்ணுறாங்களாம். சரியா போச்சு... காலையில பண்ணுவாங்களா..   ஜனங்க வேலைவெட்டிக்கு போகவேணாம்... டேய் மாப்பிளை நான் நடந்து போறேன் .. முதல் பிரியட் டெஸ்ட் என் சொல்லிய வாரு நடந்தான். அவனுடன் சில பெண்களும் முணங்கி கொண்டே இறங்கினர். அவன் இன்னும் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான். பார்வையில் அவர்களும் இறங்கி நடக்கவே சமிக்க்சை இருப்பதாக தெரிந்தது. இருந்தாலும் அவர்கள் ஒரு சிலருடன் வண்டியிலேயெ அமர்ந்து இருந்தனர்.

      போனமா வந்தமான்னு இரு .நூறாம் நம்பர் வார்டு மறந்திடாம..இந்த துணியை கொடுத்திட்டு பேசிகிட்டு இருக்காமா சீக்கிரமா வா... பத்து மணிக்கெல்லாம் ரேசனில் அரிசி , மண்ணெண்ணை வாங்கணும்...என்ற ஞாபகம் வர நானும் இறங்கி நடந்தேன்..
என்னா..அவனும் அவளும் என்ன ஆணாங்க ... எங்க இறங்கினாங்க...என கேட்கிறீங்களா... ? அந்தா பஸ் நிக்குது... ஏறிக்குங்க.. நிறைய கதை சொல்லும்... கேட்டுக்கங்க... அவனையும் அவளையும் பற்றி விசயம் தெரியும்.




   

Monday, August 30, 2010

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்...

சூரியன் வெடித்து
ஓசோன் உடைத்து
புற, அக ஊதா கதிர் தாங்கி
அக்னி கக்கி
நேரடியாக விழுந்தால்
அலறும் பூமிப் போலத்தான் இருக்கும்
படிச்சவனின் சூதும் பாவமும்...!

தடம் புரண்டு உயிர் குடிக்கும் இரயில் போல
சாலை மறந்து சாவு வாங்கும் பேருந்து போல
ஓடுப்பாதை தவறி தரையிறங்கி
உயிர்களை தீக்கிரையாக்கும் விமானம் போல
விதிமறந்த செயலாகத்தான் இருக்கும்
படிச்சவனின் சூதும் பாவமும்...!

கனிக்குள் வண்டு இயற்கை
கனியும் இனிக்கும்
கனியே வண்டானால்
எப்படி இருக்கும்...
அப்படித்தான்
படிச்சவனின் சூதும் பாவமும்...!


படிச்சவனின் காதலிலும் சூது...
கற்பத்துடன் ...
அவனின்
வீடுகளின் முன்னால்
கண்ணீரும் கதறல்களுடனும்...
நீதி மன்ற வாசலில்
தர்ணா போராட்டத்தில்
பாவமாய் பாவம் சுமந்து
நித்தம் தொடருகிறது...!

சின்ன பிஞ்சுகள் கூட
சில்லரை கேட்கிறது
சின்ன முத்தம் கொடுக்க....

உறவுகள் கூட
உண்மையாய் உறவாட
உத்திரவாதம் கேட்க்கிறது
பருத்த பர்சுகளுக்காக...

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
குடும்பமும் விரோதமாய் தான் இருக்கும்..!

படிச்சவன் சூதும் பாவமும்
காலில் கடிக்கும் எறும்பை
நசுக்கி விட்டு
உயிர்களிடத்து அன்பு கொள்
என சித்தாந்தம் பேசும்...!

வெற்றுக் காகிதங்கள்
படிச்சவனின் கைகளில்
உயிர் பெறுவதைத் தவிர்த்து
கரண்சி காகிதங்களுக்காக
இரத்தக் கரையைச் சுமக்கின்றன...
இறந்தவனின் குடும்பம்
இவனின் சூதாலும் பாவத்தாலும்
தெருக்களில் அனாதைகளாய்
காகிதம் பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறது..!


படிச்சவனின் சூதும் பாவமும்
கல்விக் கூடங்களிலும்
ஆகவே தான் ...
சரஸ்வதியும்
நீதிதேவதைப் போன்று
கண்கள் மூடி
கரண்சிகளுக்கு அடிமையாய்...!

படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால்
அய்யோ வென்றுப்போவான்...
என பாரதி போல சொல்லி
அல்பாயுசில் சாக ஆசைப்படாததால்....
கைகள் கட்டி
வாய்கள் பொத்தி
கண்கள் மூடி
காதுகள் மறைத்து
வெகுஜனமாகவே
வாழ்கிறேன்...!

மன்னிக்கவும்
வாழ்கிறாம்..!
















Thursday, August 26, 2010

ஆயிரத்தில் ஒருவன்

         நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த மனிதரை பார்த்தேன். அவர் தமிழக கல்வி துறைக்கு ஒரு வரப்பிரசாதம். மரியா மாண்டிசரி, காந்தி, ஜே.கே.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரை உள்வாங்கி இருக்கும் ஒரு நல்ல மனிதர். எல்லாருக்கும் உள் வாங்குதல் என்பது சாத்தியம் .ஆனால், உள்வாங்குதலை வெளிப்படுத்துதல் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு தான் சாத்தியம். அந்த ஆயிரத்தில் ஒருவன் தான் நம் தமிழக பள்ளிகளை  மாணவர்கள் விரும்பும் பள்ளிகளாக மாற்றி கல்வியில் ஒரு புரச்சியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அதனை தக்க வைக்க ஒரு மௌன போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்.

         நீண்ட நாட்களுக்கு முன் விஜய் டிவியில் அவரை நீயா நானாவில் பார்க்கும் போது ஒருவித ஈர்ப்புக் கொண்டேன். அவரின் எளிமை , இனிமையான பேச்சு , கல்வியின் மீது உள்ள ஆர்வம். இந்த வயதிலும் ஒரு இளமைக்கான துடிப்பு. இவை தான் தமிழக கல்வித்   துறையை பிற மாநிலங்கள் தலை நிமிர்ந்து பார்க்க செய்திருக்கிறது.தமிழகத்தில் இனிமையான கற்றல் அமைந்திருக்கிறது. தேர்வு குறித்த அச்சம் மறைமுகமாக  நீக்க பட்டுள்ளது.

          எந்த ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றாலும் நமக்கு ஒரு சிறந்த துணைத்  தேவை.நல்ல நண்பன் அமைந்து விட்டால் , வாழ்க்கையில் எல்லாமே நல்லவைகலாகத் தான் நடக்கும் . அது போலத்தான் , தமிழக கல்வி துறையின் புதுமை திட்டத்திற்கு , நம் நாயகனுக்கு துணையாக அறிவொளி நாயகன் கிடைத்துள்ளான். நான் என் அறியா பருவத்தில் கல்லூரி நாட்களில் பொழுது போக்காக சென்ற அறிவொளி திட்ட செயல் பாடுகளில் அவரின் கற்றல் முறைகளை , திட்டம் செயல்பட அவர் காட்டும் ஆர்வத்தினை பார்த்து வியந்து இருக்கிறேன். மதுரையின் துணை மேயார் பங்களா , நான் அறிவொளியில் இருந்த காலங்களில் அறிவொளிக்காக ஒதுக்கப்பட்டு, பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் மறாவாத அனுபவம். இன்று நடைமுறையில் உள்ள பூத்தக பூங்கொத்து என்பது வயது வந்தோர் கல்வி திட்டத்தில் அறிவொளி அமைப்பின் கீழ் நூலகமாக இயங்கிய ஒன்றின் வெளிப்பாடாக தான் இருக்கிறது. பள்ளிகளில் இளமையில் பாட புத்தகத்தை தவிர்த்து பிற நூல்களை படிப்பது என்பது அதிசயம் , மற்றும் ஆச்சரியம்.

          இன்று நடைமுறையில் புத்தக வாசிப்பை ஒன்றாவது வகுப்பு  முதல் நடைமுறை படுத்தி இருப்பது நம் நாயகனின் சாதனைகளில் ஒன்று. என் காலங்களில் பள்ளி பருவத்தில் நூலகம் ஒன்று உள்ளது என்பது மட்டும் தெரியும் .  அதுவும் அது ஆசிரியர்கள்  ஓய்வாக செய்தி தாள் வாசிக்க வசதி ஏற்படுத்தி தந்துள்ள ஒரு அறை என்றே பலராலும் உணரப்பட்ட இடம். . சில சமயம் தவறுதலாக கால் அடி எடுத்து வைத்தாலும் , சத்தம் போடக் கூடாது என விரட்டி அடிக்க பட்ட அனுபவமும் உண்டு.  ஆனால் ,இன்று பள்ளிகளில் மதிய இடைவேளைகளில் பார்வையிட செல்லும் போது குழந்தைகள் புத்தகங்களை , பட அட்டைகளை வைத்து கதை பேசும் அழகை ரசிக்கும் போது , தமிழகம் கல்வியில் ஒரு புரட்சிக்கு செய்து கொண்டிருப்பது தெரிகிறது.

         சென்னை கார்பிரேசன் கமிஷனராக இருந்த ஒருவருக்கு கல்வியின் மீது ஏற்பட்ட காதல் , நம் கல்வி முறையையே புரட்டி போட்டு , ஒரு சாதனையை சப்தம் இல்லாமல் நடத்த உதவி இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.என்னை போல பலர் கல்வியில் ஒரு வித மாற்றம் தேவை , மாணவர்கள் சார்ந்த தானே கற்றல் தேவை என்ற சிந்தனையில் இருந்த வேலையில் ,  மாண்டிச்சரி  முறையிலான , ஜே, கே.வின் போதனைகளை உள்ளடக்கிய , காந்தியின் வழிகளில் வாழ்க்கைக்கு உகந்த கல்வியை சென்னையின் குறிப்பிட்ட பள்ளிகளில் நடைமுறை படுத்தி வெற்றிகண்ட  நம்  ஐ.ஏ.எஸ்.அதிகாரி ,மாணவரின் கற்றல் சூழல் மாறுபாட்டுடன் கல்வி அடைவுகளிலும்  மாற்றம் கண்டவுடன் அதை சென்னையின் எல்லா பகுதிகளிலும் இந்த செயல் வழிக் கல்வி திட்டத்தை அமல்படுத்தி ,சர்வ சிக்ஷா அபியான் உதவியுடன் தமிழகம்  முழுவதும்  இந்த கல்வி முறையை நடைமுறைப்  படுத்தி,நம் கல்வி முறைகளில் , கற்றல் சூழலில் மாற்றத்தினை ஏற்படுத்தி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது , பாராட்டாமல் இருக்கவும் முடியாது.
                     செயல் வழிக் கல்வி திட்டம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தினை மேம்படுத்தியுள்ளது. ரிஷி கேசில் உள்ள கல்வி முறையை கற்று , தமிழகத்தில் அதனை நடைமுறை படுத்த நம் நாயகனுடன் உதவியாக இருந்த சென்னை மாநகரக்  கல்வி அதிகாரி மாலதி அம்மா  அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் . அறிவியல் பாடத்தின் மாவட்ட கருத்தாளராக செல்லும் போது ,இனிமையாக எந்த வித அதிகார தோரணையும் காட்டாமல் ,தன்னையும் ஒரு சக  ஆசிரியராய் காட்டி , சிரித்த முகத்துடன் பயிற்ச்சியினை தரும் விதம் பல நேரங்களில் என்னை அசை போட வைத்துள்ளது. பயிற்சியின் ஊடே தான் ஆசிரியராய் பணியாற்றிய காலங்களில் வந்த இடர்பாடுகள், அவைகளை கலைந்த விதம் , மாணவர்களை தேடி சென்று திரை அரங்குகளின் முன்னால் பிடித்த விதம், பெற்றோர்களை சந்தித்த விதம் ஆகியவைகளை அவரின் சொற்களால் கேட்பதில் உள்ள சுகம் தனி. அவை இனிமையாக இருப்பதுடன் ,நம்மையும் ஒரு சிறந்த ஆசிரியராக மாற்றும் என்பது தான் அவரின் தனி சிறப்பு. 

           இரண்டு நாட்கள் முன்னாள் கல்வி அதிகாரிகளுக்கான செயல்  வழிக் கற்றல் பயிற்ச்சியினை பார்வையிட வந்த நம் நாயகன் நம் அதிகாரிகளுடன் உரையாடிய அனுபவத்தினை பார்க்கும் போது , தமிழகம் புண்ணியம் செய்துள்ளதால் தான் இவர் திட்ட அதிகாரியாக நமக்கு கிடைத்துள்ளார் என்பதை உணர்ந்தேன்.  சிரித்து கொண்டு , ஒரு அதிகார தோரணை இன்றி , ஒரு நண்பனாய், ஒரு சக ஊழியனை போல உரிமையுடன் , ஒரு தாயுள்ளத்துடன் , அதே சமயம் கல்விக்கு அதிகாரிகள் செய்ய வேண்டிய கடமைகளை நகைச் சுவையாக எடுத்துரைக்கிறார். தன் மகளின் குழந்தையை பள்ளியில் சேர்க்க ஆலோசனை சொல்லும் போது உங்களுக்கு ஒன்றும் தெரியாது என விரட்டும் மகளை பற்றி குறிப்பிட்டு,தன் பேரக்குழந்தை படிக்கும் பள்ளியில் கராத்தே, பாட்டு , நடனம் என பல சொல்லி தருகிறார்கள். நான் சென்ற முறை பேத்தியிடம் போனில் பேசிய போது என்னம்மா  செய்து கிட்டு இருக்கே என்றேன். அதற்கு நான் சாமி கும்பிடுகிறேன் தாத்தா என்றாள். நான் என்னம்மா வேண்டிக்கிட்ட என கேட்டேன். அதற்கு தாத்தா நான் டான்ஸ் கிளாசில் சேர்ந்துள்ளேன், டான்ஸ் டீச்சர் எனக்கு இடுப்பு  சரியா வர மாட்டிங்குது ,எனக்கு இடுப்பு சரியா வளையனும்ன்னு சாமி கும்பிடுகிறேன் என்றாள் என்றவுடன் அனைவரும் சிரித்தனர். அவள் சற்று பருமன் , பாருங்க ஒரு சின்ன பிள்ளை தான் செய்யும் பணியில் ஒரு வித நேர்த்தி வேண்டும் இன்று வேண்டி  கொள்கிறாள், நாம் மிகவும் வளர்ந்தவர்கள் , நமக்கு நம் பணியில் ஒரு வித பிடிப்பு வேண்டும் , ஒரு அற்பணிப்பு வேண்டும் , நம் கடமையை சரியாக செய்ய வேண்டும் , இந்த திட்டம் வெற்றி பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது, பள்ளிகளுக்கு செல்லுங்கள் பார்வை இடுங்கள். செயல் படாத பள்ளிகளுக்கு ,திறமையான ஆசிரியரை அனுப்பி , அப் பள்ளி ஆசிரியருக்கு உதவுங்கள், தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொள்ளுங்கள் , பள்ளியில் செயல் வழிக் கற்றல்  மேம்பாடு அடைவதற்கு உதவுங்கள்.யாரையும் திட்டாதீர்கள், யாருக்கும் தண்டனை கொடுக்காதீர்கள் , நீங்களே முன் நின்று ஆசிரிய பயிற்றுனர் மற்றும் மேற்பார்வையாளர் உதவியுடன் திட்டம் வெற்றி பெற உதவுக்கள் இன்று சிரித்த முகத்துடன் சொன்னார்.

             ஆம். நம் விஜய குமார் ஐ. ஏ.எஸ் . அவர்கள் தான் நான் கூறிய ஆயிரத்தில் ஒருவன். அவரால் தான் தமிழகம் கல்வியில் மாற்றத்தினை கண்டு வருகிறது. நம் மாணவர்கள் முதல் வகுப்பிலேயே செய்தி தாள் வசிக்கிறார்கள் .ஆர்வமுடன் , இடை நிறுத்தம் இன்றி கற்று தருகிறார்கள். மாணவர்கள் ஆசிரியருடன் பயம் இன்றி , சக மாணவன் துணையுடன் கற்கிறார்கள்.  அது இவர் கல்வியின் மீது கொண்டு தீரா காதலால் ஏற்பட்ட மாற்றம் ஆகும். இவர் நல்ல சுகத்துடன் பல்லாண்டு வாழ தமிழக பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.     

Monday, August 23, 2010

காசு தீரும் வரை ...!

செல் அற்ற வாழ்க்கை
சொல் அற்றது ...

செல் காதல் சொல்லும்
பின் மெல்ல கொல்லும் ...

செல் மொழி
பாற்கடல் அமுது
காதலாய் வரும்போது ....

செல் மொழி
பாகற்காய்
பலருக்கும் மனைவி பேசும் போது ...

செல் மொழி
பொய்மையும் உண்மையாக்கும்
அலுவலக அழைப்பில்
தொலைவிலுருந்தாலும் அருகில் காட்டும்...
பலருக்கும் தொல்லையாய் காட்டும் ...!

செல் மொழி
உயிரோட்டமாய் 
சிரிக்கும் மழலை பேச்சில்...!

செல் மொழி
நகைச்சுவையாய்
வடிவேல் கிளிப்பில்  ...

செல் மொழி
அருவருப்பாய்
வேண்டாத எஸ். எம். எஸ். ல் ...!

செல் மொழி
ஆபத்து
தீவிரவாதத்துக்கு துணையாகும் போது  ..!

செல் மொழி
விபத்து
சார்ஜில் பேசும்போது ..!

செல் மொழி
நேர்காணல்
3ஜி போனில் பேசும் போது...!

செல் மொழி
அனலாய்
அனானிமஸ் காலில் ...!


செல் மொழி
அன்பாய்
அன்னையின் பேச்சில் ...!

செல் மொழி
பண்பாய்
கஸ்டமர் காலில் ...!

செல் மொழி
முகம் சுளிக்க செய்யும்
கத்தி பேசும் நபரை பார்க்கையில் ...!


செல் மொழி
ரசிக்கும்
குழந்தையின் பேச்சில் ..!


இப்படியாய்
செல் பொருள் பொதிந்து
பொருளற்று ...
காதல்  கனிந்து
தன்னை மறந்து
கண்ணை மறைத்து
கத்தியும்
கை பொத்தியும்
பேசும்
பேசிக்கொண்டே இருக்கும்
காசு தீரும் வரை .....!

Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல

   மதுரை ரோடுகளில் பள்ளம் மேடு கடந்து , வேகமாய் பறக்கும் பைக்கின் பின்னால் , ஹெல்மட் அணிந்து செல்லும் பெண்கள் , "சீக்கிரம் டா" என்ற சிணுங்கலுடன் , புதூரை தாண்டியவுடன் தலை கவசம் கழட்டி, கைகள் இருக்க அவனை அனைத்து , காதல் மொழி பேசி செல்லும் அழகு ரசிக்கும் போது மனது அடித்துக் கொள்ளும் "நமக்கு இது போன்று வாய்க்க வில்லையே". அழகர் கோவில் ரோடு ஆள் நடமாட்டம் இன்றி , காதல் தென்றல் வீசும் அழகு , சில வேளைகளில் நம்மையும் அவர்களை தொடரச் செய்து , ஒரு கேவலமான மனநிலைக்கு உந்தும்.

       இப்படி தான் நானும் என் நண்பனும் கள்அழகரை தரிசிக்க அன்று பயணம் மேற்கொண்டோம். சாலைகள் மலர்கள் தூவி , உடலுக்கு குளுமை தந்து , தென்றல் வீசி வரவேற்றன. சாலை நீண்டது, சாலையில் காதல் மென்று  ஜோடிகள் கடந்தன...அழகர் மலை அவர்களை அன்புடன் வரவேற்றது. மலையின் தனிமை , அவர்களின் இளமை , காதலின் புதுமை ,அவர்களை தனியிடம் தேடி புகழடைய செய்தது.

       மலை அடிவார சிற்பத்தை ரசித்தவாறு ,"மாப்பிள்ளை, என்னடா ரெம்ப பீல் பண்ற ...நிஜத்தில காட்டுறேன்....வா ...மேல போவோம் ...நிறைய நமக்காகவே போயிருக்கு ...உனக்கு நல்ல வேட்டை தரேன்..." என்ற நால்வரை நான் பார்த்த போது எனக்கு ஒரு திகில் இருத்தது. இருத்தாலும் அதை காட்டி கொள்ளவில்லை .
        "பார்த்தியா சரோ , கல்லூரி நண்பர்கள் எவ்வளவு ஜாலியா எதார்த்தமா  இருக்காங்க "
"இப்ப உள்ள பசங்களுக்கு இங்கிதம் தெரியல ...பொது இடங்களில் கேவலமாக பேசுவதும், பொது இடங்களில் காதல் என்ற பெயரில் காமம் தழுவி நிற்பதும் பேசன் ஆகி போனது "என்ற என் அருகில் இருந்த பெரியவர் பேச்சு என்னை மேலும் சிந்திக்க வைத்தது.
    
          நானும் அவனும் தீர்த்தம் ஆடி , சாமி தரிசனம் செய்து , அதற்கும் மேலும் மலையின் இளமை ரசிக்க பயணிக்க ...சிறிது தொலைவில் ஜோடிகள் வரம்பு மீறி , படர்ந்து கிடக்க ... "டேய், வாடா...போதும் கீழ போவோம் ...தேவை இல்லாம எதுக்கு ..."என்றேன். "டேய், பொறாமை படாத , இதுக்கும் மேலே ...உட்சியில்ல போய் பார்த்தா திண்டுக்கல் பார்க்கலாம் ...நாமக்கு முன்னால அந்த கல்லூரி பசங்க போறாங்க பயப்படாம வா " என கூறிக்கொண்டே கடந்தான்.

             ஒரு நிலையில் நான் ...என்னால நடக்க முடியாமல் ...டேய் நீ நட ...நான் அப்படியே ...சிறுநீர் கழித்து வருகிறேன் ..." என கூறி நடப்பதை தவிர்த்தேன்.  அவனும் என்னை தாண்டி கடந்து சென்றான். நான் , ஒரு மர நிழலில் ஒதுங்கி திரும்பிய போது....அவர்கள் வார்த்தைகளின் உண்மையை உண்மையாய்  உணர்ந்தேன். வேட்டையாடி கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவன் என்னை பார்த்துவிட்டான். வியர்த்து விறு விறுக்க , தலை தெறிக்க ஓடிவந்தேன். .. இனி எனக்கு என்ன நடக்குமோ...?

             இங்கு நிறுத்தினால் நான் மாகன் அல்ல ... படம் தொடரும் . சாதாரண மனிதனாக இத்தவறுகளை செய்பவர்களை என்மனம் ரோட்டில் நிற்க வைத்து சுடச் சொல்லும் . அக் கதையில் வரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் என்ன செய்திருப்பான் என்பது தான் கதையின் முடிவு.

         சுசீந்திரன் கதை வடித்த விதம் அருமை. திரை கதை தொய்வில்லாமல் செல்கிறது. காதல் சொல்லி நகைச்சுவையாய் நகர்ந்தாலும், இடைவேளையில் அதிரடி சரமாக வெடிக்கிறது.
        வசனகர்த்தாவை பாராட்டியே ஆக வேண்டும் . திரை கதையை தொய்வில்லாமல் நகர்த்த வசனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
        கமிரா தன் பணியை சுத்தமாக செய்துள்ளது. யுவன் இசை பாராட்ட கூடியது .

    பருத்தி வீரன் கார்த்தி,இதற்க்கு முந்தய படங்களில் சூரியாவின் சாயல் தெரிந்தாலும் , இப்படத்தில் இயல்பான நடிப்பால் காமடி பண்ணி உள்ளார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. கஜால் அகர்வால் நன்றாக வலிந்துள்ளார் .(டைரக்டர் சொன்னத தானே செய்ய முடியும் )
  
கல்லூரி மாணவர்களாக நடித்துள்ள நால்வரும் அருமையாக நடித்துள்ளனர்.

       படம் வேகமாக நகரும் திரை கதையால் வெகுஜனங்களை கவரும். 


சுசீந்திரன் மிக வலுவாக  நம் கல்லூரி மாணவர்கள் செய்யும் தவறுகளை தோலுரித்து காட்டியுள்ளார். காதல் என்ற போர்வையில் தனிமையில் உல்லாசம் காணும் காதலர்களுக்கு நேரும் கதியினை கண்முன்னே கொண்டு வருகிறார். காதல் என்ற பேரில் சல்லி காசுக்கு பிரோஜனம் இல்லாத ஒருவனை நம்மி சென்றால் என்ன நேரிடும் என்பதை தெள்ள தெளிவாக விளக்கி உள்ளார்.

         காதல் செய்யும் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். கல்லூரி செல்லும் பெண்களை வைத்துள்ள பெற்றோகள் அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். 


பின் குறிப்பு...தயவு செய்து அதில் வரும் வன்முறையை படத்துடன் விட்டு விடவும்.

Saturday, August 21, 2010

மரண ஓலங்கள்

இரத்தம் சுவைக்கிறது 
சாலை ....
பாரு ...!
பார் செய்த மாயம் பாரு !

காலை
டாட்டா காட்டி
இன்முகத்துடன்
அனுப்பிவைத்தால்
மங்கயற்கரசி ...
மாலை
மயக்கத்துடன்
சாலை பயணம்
சாவில் முடிந்தது ...!

இவன் நல்லவன் தான்
குடிக்கவில்லை ...
இருந்தாலும்
குடி முழ்கிவிட்டது...
குடித்தவன் எதிரில் வரும் போது
நல்லவன் கெட்டவன்
வேண்டியவன் வேண்டாதவன்
விரும்பியவன் விரும்பாதவன்
என்பதில்லை
அனைவருக்கும் எமன் அவனே...!

எமன் தர்பாரில் வாழ்த்துமழை
தமிழக அரசுக்கு...
பார்... பார் ...பார்
எமன் வேலை செய்யுது பார் ..!

கட்டிய மனைவி  தூக்கி எறிய
கதுறும்  குழந்தை
கண் முன்னே ...
இரத்தம் ஒழுகி
கை நசுங்கி
கால் ஒடிந்து
தலை சாய்ந்து
கனவுகள் கசிந்து
கரம் பிடித்த மனைவி
கை நழுவி
கண் எதிரே
அகோரமாய் சாகிறான்
விதிகள் மீறாமல்
வீதி ஏறி வந்த அவனுக்கு ..
விதி வந்தது
அரசு பாரிலிருந்து
வந்தவனின் காரிலிருந்து ...!


Thursday, August 19, 2010

மாணவர்கள் சாவு தடுப்போம்...

   இன்று பள்ளி செய்திகள் என்றாலே 'மாணவர் சாவு , ஆசிரியர் கைது' என்று வருகிறது. இது ஆசிரியரின் தவறு என்று ஒருவிதத்தில் பார்த்தாலும் , மறுபுறம் நம் சமூக அமைப்பு மாறி வருதலும்  காரணமாக இருக்கிறது. 

    என் நண்பர் வகுப்பில்(பதினொன்றாம் வகுப்பு) மாணவனை திட்டி உள்ளார் .மாணவன் ஒருவன் அருகில் உள்ள மாணவனை தொடர்ந்து படிக்க விடாமல் தடுத்துள்ளான் , அவனை பார்த்த ஆசிரியர்,"என்னடா நீயும் படிக்காம அடுத்தவனையும் படிக்க விடாம விளையாடுற...என கூறிக்கொண்டு  கையால் காதை ஒரு திருகு திருகி இருக்கிறார். அருகில் உள்ள மாணவன் "சார், அடிச்சீங்கில ....விஷம் தான்... நாளைக்கு நீங்க பேப்பர் நியூஸ் தான் .." என கிண்டல் செய்துள்ளான்.

     சமூகத்தில் மீடியா விழிப்புணர்வு ஒருபுறம் பாராட்ட தக்கதாக இருந்தாலும் ,அது தவறாக பயன் படுகிறது.
        
    ஆசிரியர் மாணவர் உறவு நண்பர்களாக இருக்க வேண்டும் என்றாலும் , ஒரு வித மரியாதை அவசியம் தேவை. ஆனால் , அது மாணவன் தர மறுப்பதாலும், ஆசிரியரை ஒரு வித விரும்பத்தகாத தோழனாக கருதுவதால் மோதல் தொடங்கி , ஒரு எதிரியாகவே பார்க்கிறான். அது ஆசிரியரை வம்பில் மாட்டிவிட வேண்டும் என்று நினைத்து பயமுறுத்தலுக்காக தொடங்கும் ,தற்கொலை முயற்சி , முற்றிலும் தற்கொலையாகவே முடிகிறது.

    மாணவர்கள் இன்று உணர்ச்சி வயபட்டவர்களாக உள்ளார்கள். சொல் பொருக்கதவர்களாக உள்ளார்கள்.  மிகவும் வீரியத்துடன் , மனநிம்மதி இன்றி , ஒரு வடிகாலை தேடி ,தன் வயப்பட்டவனாக உள்ளார்கள். மீடியாவின் உதவியால் அனைத்து விசயங்களையும் தெரிந்தவர்களாக உள்ளார்கள். எதையும் சந்திக்க தாயாராக உள்ளார்கள். எதிர்த்து நிற்க (தவறானவைகளுக்கு உடந்தையாக)தாயாராக உள்ளார்கள்.  புதிய தொழில் நுட்பம் அறிந்தவர்களாக உள்ளார்கள்.பால் கவர்ச்சி உடையவர்களாக  உள்ளார்கள்.  அன்பு , பாசம், பரிவு , கனிவு இவைகளுக்கு ஏங்குபவர்களாக இருக்கிறார்கள்.

    பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக உள்ளார்கள்.. குடும்பம் பற்றி கவலை இருப்பினும் நேரம் இன்மையால் தன் மகன் படிப்பு கூடத் தெரியாதவர்களாக உள்ளார்கள் .எப்போதும் தன் குழந்தைகள் முன் சண்டை போடுபவர்களாக உள்ளார்கள். தான் இழந்த ஒன்றை மீண்டும் பெற தம் குழந்தைகளை பயன்படுத்துபவர்களாக உளார்கள்.எப்போது தொலைக்காட்சி பெட்டி மீது ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்கள். குழந்தை படிப்பு மீது அக்கறை இருப்பினும் , இயலாமையால் அதை தர மறுக்கிறார்கள் அல்லது முயற்சிக்கிறார்கள். 

      சமுகம் ஒருவர் மீது ஒருவரை குற்றம் சுமத்துவதாகவும். அருகில் உள்ளவர்களுடன் போட்டி போடுவதாக இருப்பதால் பழிபோட தயாராக இருப்பதாகவும் உள்ளது. தன் குற்றத்தை மறைக்க  தொடர்ந்து தவறுகளை செய்கிறது. இளைய தலை முறைக்கு தவறான கருத்துகளை பரப்புவதாகவும் உள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சவாரி செய்தாவது முன்னேறுவது மிகவும் நன்று எனவும் சொல்லுகிறது.  இரக்கம் என்பது அற்றும் , கொலை, கொள்ளை , வழிப்பறி , கற்பழிப்பு சகஜமாகி போன வாழ்வை கொண்டதாக உள்ளது. தவறுகளை தட்டி கேட்காமல்,கண்முடி செல்லுவதாகவும் . தவறுகளுக்கு உடந்தையாகவு உள்ளது.  வீதியில் நடக்கும் சண்டைகளை வேடிக்கை பார்க்கிறது. தன் குழந்தைக்கும் கற்று தருகிறது.


     கல்வியில் கற்றல் முறைகள் மாறிவந்தாலும் , கற்றல் சூழலில் புதுமைகள் பல வந்தாலும் மாணவனின் மன நிலை சமூகத்தால் பாழ்பட்டு வருவதால்,அவனை மாற்ற ஆசிரியர் கடின முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது. சமூக முரண்பாடுகள் மாணவனின் உணர்ச்சிகளை அடக்க கற்று தர மறுத்து விட்டதால், மாணவன் எளிதில் தன் வயப்பட்டு, மோதலில் ஆசிரியருடன் ஆரம்பிக்கிறான், பெற்றோரும் அவனுக்கு துணையாக இருப்பதால், ஆசிரியர் ஒரு நிலையில் தன்னை இழக்க நேருகிறது .எல்லாவித எமோசனல் இன்டளிஜன்ட் களும் மாணவன் மன நிலையில் ஒருவித கசப்பான அனுபவத்தை பாய்ச்சி இருப்பதால் , மாணவன் தன் வயப்பட்டு , தற்கொலை முடிவுக்கு வருகிறார்.

       மாணவர் சாவு என்பது ஒரு ஆசிரியர் மாணவன் பிரச்சினையாக எடுக்காமல் , அதையும் தாண்டி , ஒரு சமூக பார்வையில் நோக்கினால், நாம் அனைவரும் சேர்ந்து நம்மை திருத்தி, நல்ல எதிர்காலம் , வளமையான பாரதம் அமைய இணைவோம், பாடுபடுவோம் .

Wednesday, August 18, 2010

பார்...வாழ்க்கை..!

கனவுகளுடன் அவள்
கால்வயிறு கஞ்சிக்கு  ...
காசுகளுடன் அவன்
கால் கடுக்க வரிசையில்
கிடைக்குமோ கிடைக்காதோ ...
காக்கிகள் கண்டு
காந்தியும் பதுங்குகிறது....
கால்வயிறும் காயும் என்று ...
"இன்னைக்கு சுதந்திரதினம்"
தெரியுமில்லை...
காந்தி சிரிக்கிறார் ரூபாய் நோட்டில்...
காக்கியும் காவல் காக்கிறது....
அவனுக்கும் சுதந்தி ரம் கிடைத்தது...
வற்றிய முலைக்காம்பு திணித்து
கதறும் குழந்தையின் அழுகை நிறுத்தி...
கொதிக்கிறது உலை ...
எப்போதும் போல் ....
கால்கள் ஊன்றாமல்
கட்டிய வேட்டி நிற்காமல்
கைகள் ஊண்டி
வாய்கள் உளறி...
தள்ளாடி விழுகிறான்
அவள் மேல்...
வீரிட்டு அழும் குழந்தை...
காதல் கணவனை பிரிந்து
பக்கத்து மாமாவிடம்
பால் உறுப்புக் கொடுத்து
வழக்கம் போல் குழந்தைக்கு
பால் வாங்கி நிறுத்தினால்
அழுகையை....
அவள் மட்டும் அழுதுகொண்டு...!

Tuesday, August 17, 2010

சொல்ல மறந்த கடிதங்கள்...

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது ,
    
            வசதியாகத்தான் இருக்கிறது மகனே நீ என்னைக் கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.  
          
           பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நே வெளியேறிய போது, முன்பு நானும் இதுபோல் உன்னை வகுப்பில் விட்டுவிட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

           முதல் தர்மிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில் ... அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்று ஓடி அலைந்ததை
ஓப்பிடு செய்கிறேன்.

          இது வரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும், என்  பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மகிழ்கிறேன்!

         நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க ஆவல் இருந்தாலும் , படிபை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இது வென்று விளையாட்டாக நினைத்துக் கொள்கிறேன்.

         இளம் வயதினில் நீ சிறுகச் சிறுகச் சேமித்த அனுபவத்தை என் முதுமையில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்.

        ஆயினும் ....உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு ,
                               நான் கற்றுக் கொடுத்தேன் உனக்கு
                               வாழ்க்கை இது தானென்று...!      
                               நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு
                               உறவுகள் இது தானென்று....!

                                                                                        என்றும் அன்புடன்
                                                                                  உனக்காகவே வாழும் தந்தை.
            


    

Monday, August 16, 2010

கல்விக்கான நல்ல செய்திகள் ....

      கல்விக்கான நல்ல செய்திகள் சில நாட்களாக வரவில்லை .மாணவர் தற்கொலை என்ற செய்தியால் மிகவும் மனம் வருந்தி ஆசிரியர்கள் மனநிலை தான் என்ன என்பதை சிந்திக்க ஆரம்பித்தேன்.

     கை நிறைய சம்பளம் . கஷ்டமில்லலாத வேலை, குழந்தை  மனநிலையில் எதையும் மறக்க செய்யும் மாணவனுடன் பழக்கம், அதிக ரெஸ்ட், நூலக வசதி, படிக்க அதிக நேரம் கிடைக்கும் வேலை , எதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கும் மாணவன், மகிழ்ச்சியான சூழல்,மாதம் முடியும் முன் அதாவது முப்பத்தி ஒன்றாம் தேதி சம்பளம், அரசு சலுகை , சமூகத்தில் மதிப்பு ..... என கூறிக் கொண்டே செல்லலாம்.  

      பின்பு ஏன் பத்திரிகையில் அடிக்கடி "மாணவன் சாவு ...ஆசிரியர் தப்பி ஓட்டம்.ஆசிரியர் அடித்ததால் மாணவன் தூக்கு ,,, பிரம்பால் மாணவனை அடித்த ஆசிரியர் பெற்றோர் சுற்றி வளைத்து தாக்கு ....ஆசிரியரை கைது செய்ய பள்ளியை முற்றுகை..."


அனைத்திற்கும் ஒரு வரி பதில் ....வேலையில் அற்பணிப்பு  இல்லை .

    கற்றல் இனிமையாக இருக்க ஆசிரியர் தன்னை அற்பணிக்க வேண்டும். இன்று ஆசிரியர் பணி என்பது  தொழில் ஆகி போனது . ஆதலால் , ஆசிரியர்கள் மாத சம்பளம் பெறும் பணியாளர்களாக தம்மை பார்ப்பதால் ,  இதை ஒரு விருப்புடன் செய்யாமல் ஏனோ தானோ என்று செய்வதால் ,கடுப்பெடுத்து, தன் மனக்குறைவை போக்க தன் கோப தபங்களை , விருப்பு வெறுப்பை , தனிப்பட்ட பையன் மீது மதிப்பெண் சம்பந்தபடுத்தி அடிப்பதால் தொடர்ந்து சாவுகள் ஏற்படுகின்றன. 

    ஒட்டு மொத்த ஆசிரியர் சமுகம் என் மீது கல்லெடுத்து எறிய வந்தாலும் , இது தவிர வேறு எந்த காரணமும் மாணவன் மீது அளவுக்கு அதிகமாக காட்டம் காட்டி , மரணம் ஸ்தம்பிக்கும் அளவு கல்வி போகக் கூடியதாக இருக்க முடியாது !


  • ஆசிரியர்கள் பணியின் மீது ஆர்வம் குறைதல் , மாணவனை புரிதல் இன்றி கட்டாய கல்வியை திணிக்க செய்கிறது . அதுவே பின்பு , வலுவாகி , வெறுப்பை  உண்டாக்கி , பிரம்பை வைத்து அடிக்க தூண்டுகிறது.  


  • ஆசிரியர்கள் ஒரு புரிதல் இன்றி மாணவனுடன் கொள்ளும் உறவு , தொடர் விரிசலை உண்டாக்கி , அவனை கண்டாலே ஒரு வெறுப்பை உருவாக்கி , மாணவன் மன நிலையை பாதித்து , அவனை தற்கொலைக்கு தூண்டுகிறது 


  • ஆசிரியர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை , சமூக நலன் கருதி , ஒரு வளர்ச்சி பணியாக கொள்ளாமல் , தம் சொந்த நலனுக்கான வளர்ச்சி பணியாக கருதுவதால், பள்ளியில் பாடம் என்பது தேர்வாகி , அத் தேர்வுக்கு தயாராக ஒரு வசதியினை ஏற்படுத்தும் விதமாக மாலை நேர காசு கொடுக்கும் படிப்பினை தொடருவதால், மாணவன் ஆசிரியர் மோதல் காசில் ஆரம்பித்து , சாவில் முடிகிறது.

  • மாணவர்களும் முற்போக்கு சிந்தனை என்று கருதி ஆசிரியர்களுடன்( நன்கு படித்தாலும் , மீடியாவின் உதவியால், தம்மை மெருகேற்றி ) கருத்து மோதலில் ஆரம்பித்து  , நீயா நானா என்ற அடிப்படையில் ஈகோ உருவாக்கி , அதுவே அம் மாணவனுடன் மோதல் போக்கை உருவாக்கி , முடிவில் அவன் மனம் பாதிக்கும்  படியாக ஆசிரியர்கள் பேச தூண்டுதலாக அமைகிறது .   

 

  • மாணவர்கள் படிப்பின் மீது உள்ள ஆர்வம் , ஆசிரியர் ஒரு தகவலை கூறும் முன் அவ்விசயத்தை தான் சொல்லுதல் மூலமாக தன்னை அடியாளம் காட்ட மாணவன் முயலும் போது ஆசிரியர் மாணவன் மீது கடுமையான கோபத்துக்கு உள்ளாகி , தன்னை அடையாளம் காட்ட , தன் வகுப்பை தன் கட்டுக்கும் வைக்க பிரம்பை எடுப்பதாலும் , மாணவன் தன் மனநிலை பாதிக்க படுகிறான். 

 

  •  அதிகாரிகள் , நிர்வாகிகள் மாணவனின் கற்றல் செய்யலை மதிப்பெண் அடிப்படையில் நோக்குவதாலும் , ஆசிரியர்கள் மாணவன் குறைந்த பட்ச அடைதல் அதாவது ஜஸ்ட் பாஸ் என்ற நிலை உருவாக்க மாணவன் மீது கடுமையான வார்த்தை பிரயோகம் , அடித்தல் போன்றவற்றை கையாள நேரிடுகிறது. 

  • ஆசிரியைகள் தங்களை ஒரு ஆதிக்க வர்க்க நிலையில் பார்ப்பதும், கல்வி என்பது கரும்பலகையில் கிறுக்கி , ஒன்றாக அமர்ந்து கருத்தை காகிதத்தில் காப்பி செய்து, அதை அப்படியே தேர்வு என்ற கட்டமைப்பின் கீழ் தனியாக அமர்ந்து வேறு ஒரு தாளில் வாந்தி எடுக்க செய்வது .(இதில் புரிதல் , சிந்தித்தல் , கற்பனை செய்தல் , படைப்பு திறன் வெளிபடுத்துதல் இருக்காது )என்ற நிலையில் , மாணவனின் உளவியல் ரீதியான கருத்துகளுக்கு இடம் கொடுக்காதது . மாணவன் எளிதில் உணர்ச்சி வசப்பட்டவனாக மாறி , சொல் பொறுக்காது , தற்கொலை மனநிலையை அடைகிறான்  . 
                    தயவு செய்து ஆசிரியர்கள் நல்ல மனநிலையை உருவாக்கி , தம் பணியில் ஓர் ஆர்வத்தினை உருவாக்கி , நித்தம் தம்மை அப்டேட்   செய்து , மாணவனின் கற்றல் சுழலை இனிமையாக்கி ,மாணவனுடன் ஒரு நல்ல தோழமையை உருவாக்கி , தேர்வையும் தாண்டி , உளவியல் ரீதியான கற்றலை அமைப்போம் என்றால் மாணவன் சாவு என்பது என்றும் இராது.  

Tuesday, August 10, 2010

கதை சொல்லிகளாக இருந்து ...

      அனைவருக்கும் இருள் வந்தால் பயமும் தொற்றிக் கொள்ளும் . சிறுவர்கள் அனைவரும் காலை ஒளியின் சுகத்தில் விடியலில் சூரியனையும் முந்திக் கொண்டு எழுவார்கள்.வெளிச்சம் நம்மை தொற்றி கொள்ளச்  செய்யும் சந்தோசம் . இருள் மூடநம்பிக்கையின் வெளிப்பாடு.  
 
         சில சமயம் பெரியவர்களையும் இருள் பயத்தை உண்டாக்கி , அவர்களையும் தன்னுள் உள்வாங்கி இருக்கும்.

    முனி இருப்பதாகவும் ,இருளில் தனியாக ஆலமரம் , அரச மரத்தடியில் செல்லக் கூடாது என்றும் ,சுருட்டு வாசனை வரும் , பின்பு கொலுசு சத்தம் வரும் , திரும்பி பார்க்க கூடாது , அவ்வாறு திரும்பி பார்த்தால் முனி அடித்து விடும் . இப்படித்தான் திரும்பி பார்த்த  நான்காவது  தெரு குப்பாயி பாட்டி ரெத்தம் கக்கி இறந்து விட்டதாக கதை கேட்டிருக்கிறேன்.  
    
       பாட்டியின் கதைகள் பயத்துடன் மிரட்டலை தருவதாக இருந்தாலும் அவை மறைமுகமாக இருளில் சிறுவர்கள்  கண்மாய் கரை , தோப்பு போன்ற இடங்களுக்கு தனிமையில் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்துவதாகவே உள்ளன.
தெரியாமல் யாரும் இல்லாத இருள் பொழுதில் தண்ணீரில் கால் தவறி விழுந்து விட்டால் அவனை காப்பாற்ற ஆள்  இருக்காது என்பதற்காகவும் , தனிமையல் தோப்புக்குள் இருளில் செல்வது பூச்சி , பட்டைகளால் தொந்தரவு ஏற்பட்டு மரணம் நிகழலாம் என்பதற்காக புனையப்பட்ட கதைகளாக தான் இருக்கும்.

      இருந்தாலும் கதை மனிதன் மனதை தான் எத்தனை விதத்தில் கவருகின்றன. அதுவும் சிறுவர்களுக்கு  என்றால்  சொல்லவா வேண்டும் !   ஆனால் இன்று சிறு குடும்பங்களாக சுருங்கி உள்ள உலகில் , கதை கூட காணாமல் போயிற்று பாட்டி, தாத்தாவுடன். பாட்டி தாத்தாவை  போன்று குழந்தைகளுக்கு கதைகளும் அன்னியப்பட்டு போயிற்று.  

      இன்று பல பள்ளிகளில் மாணவர்களை சந்தித்து வருகிறேன் . அவர்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் யார்? என்று கேட்பதுடன் ..அவர்களை பற்றி விசாரிக்கும் போதும், பிடித்ததற்கான காரணத்தை ஆராயும் போதும்  ...பல ஆசிரியர்கள் கதை சொல்லிகளாக இருப்பதை உணர்கின்றேன்.வகுப்பறைகளை உயிரோட்டத்துடன் கொண்டு செல்லவும் , மாணவர்களை நல்ல மகிழ்வான மனதுடன் வைத்திருக்கவும் இந்த கதைகள் உதவுகின்றன.   

     ஆசிரிய சமுதாயம் தயவு செய்து மாணவனின் மனதை மையப்படுத்தி தன் கற்பித்தல் பணிகளை செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கட்டாய படுத்தல் மூலமாகவும் , பிரம்பு கொண்டு தண்டிக்கும் விதமாகவும் , வலிந்து கற்றலை திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவன் மனம் கவருவதாக நம் கற்றல் அமையாவிடில் , அங்காங்கே சாவுகள் நிகழ்ந்து நமக்கு சவுக்கடிகளை தந்து கொண்டு தான் இருக்கும்.

       பல ஆசிரியர்கள் மாணவர்கள் கதை என்று கேட்டால் காத தூரம் ஓடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் . இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இணையாக
 தங்களை புதுப்பித்து கொள்ள வேண்டும் .இல்லையேல் மாணவன் நம்மை புறக்கணிக்க நேரிடும். மனம் புண்படும் படியான வார்த்தைகள் தவிர்த்தல் வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் ஒரு நல்ல கதை சொல்லிகளாக இருந்து ,மாணவன் மனதில் நல்ல கருத்துக்களை, நற்பண்புகளை, நல்ல குணநலன்களை விதைத்து , நாட்டின் சிறந்த குடிமகானாக உருவாக்க வேண்டும்.
 
           மாணவனின் மன இருள் போக்கி, ஒளி தந்து வாழ்வின் வெளிச்சத்தை உணர்த்த நல்ல கதைகள் பல தந்து , பாக்குடனே  பாடம் நடத்த முன் வருவோம். சமூகத்தில் இருந்து பிற அம்புகள் நம்மை தாக்காமல் இருக்க , கை பிரம்பு தவிர்த்து , கற்றல் புரிவோம்.

 

Monday, August 9, 2010

தொலை தூரமாய் கல்வி ...

முனை மழுங்கிய கத்தி
மை அற்ற பந்து முனை பேனா
காற்றில்லா வண்டிசக்கரம்   
கரண்டில்லா  இலவச டிவி
போன்றே ....
என் பள்ளி படிப்பு !

மின் விசிறியின்
காற்றில் பறக்கும்
எடை வைக்கப்படாத
புத்தக பக்கங்கள் போல்
நிலையில்லாமல்
புரள்கிறது  என் வாழ்வும் ...
எடை போட
நல்ல ஆசான் இல்லை
நடை  போட்டது படிப்பு
பின்பு  ஏது வாழ்வில் பிடிப்பு ..?

தடை போட்டப் பின்பும் 
தாங்கிப்பிடிக்க
இல்லை நல்ல ஆசான்
தேங்கி போனது
படிப்பு மட்டும் அல்ல ....
நானும் தான் !  
ஏங்கி இனி என்ன ஆவது
என்று தானே தொலைத்தேன்
தொலை தூரக்கல்வி இருத்தும் ..!

தொலை தூரமாய் கல்வி ஆகிப்போனது ...!


பள்ளிகள் முன்பும்
கல்லூரிகள் முன்பும்
காகிதம் பொறுக்கும் போது
கசங்கி போன காகிதத்துடன்
நானும்...
கண்கள் கசக்கி !

அன்றும் இன்றும்
மாணவர்கள் வெள்ளை  சீருடையில் ...
பிரம்மாக்கள்  பிரம்புடன்  ...
கம்பிக்  கதவுகளின் ஊடே
குரைத்து தொடரும் நாயுடன் சேர்த்து
என்னையும் துரத்தினான்
வாயிற்காவலன் ...!




  

Saturday, August 7, 2010

பெற்றோர் தம் குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் ....

     பெற்றோர்கள் தம் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க ஆசைபட்டாலும் , பாசத்தில் , ஏதாவது தவறும் செய்யும் போது கண்டிப்பதை விட்டு , அவர்களின் தவறுகளுக்கு ஆதரவாக பேசுவது மிகவும் ஆபத்து.
  
       இது பள்ளிகளில் மட்டுமல்ல , கல்லூரிகளிலும் தொடர்கிறது என்பதை நான் இன்று கார்த்திகை பாண்டியனுடன் பேசும் போது அறிந்தேன். ஆர்குட்டில் ஆபாசமாக பேசும் மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்டிக்க , அதற்கு அவர்கள் பெற்றோர் , இது ஒரு பெரிய விசயமா என சப்பை கட்டு பதில் அளித்தது ,மாணவனின் எதிர்காலத்தை அழிக்கும் பெற்றோரின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

   இன்று தின மலரில் பெற்றோர்களில் தாயார் ஒரு நாளில் தன் குழந்தைக்காக செலவழிக்கும் நேரம் முப்பத்தைந்து நிமிடம் மட்டுமே என்றும் , தந்தை எழு நிமிடங்கள் மட்டும் செலவழிக்கிறார் என்ற தகவல் வருத்தமளிப்பதாக உள்ளது.

    ''மாத, பிதா, குரு , தெய்வம் '' .''தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை''. ''அன்னையும் , பிதாவும் முன்னேறி தெய்வம்'' .''தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை''. என அடுக்கி கொண்டே செல்லலாம். சில பெற்றோர்கள் மிகவும் பொறுப்பாக தம் குழந்தைகள் மீது பாசம் , நம்பிக்கை வைத்து உண்மையான கவனிப்புடன் வளர்ப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அவர்களின் குழந்தைகளும் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாவதை பார்க்க முடிகிறது .

      காலை பள்ளி துவங்கிய போது வந்து ஆசிரியரை சந்தித்து பேசி குழந்தைகளை பள்ளியில் விட்டுச் செல்லுவதுமட்டுமல்லாமல், மாலையும் பள்ளி விடும் முன்பே வந்து , தம் குழந்தைக்காக காத்திருந்து , மீண்டும் ஆசிரியருடன் பேசி அன்பாய் தம் குழந்தைகளுடன் கொஞ்சி , முறையாக வளர்க்கும் பெற்றோர்களை இன்றும் நான் பார்கிறேன்.

    ஆனால் , பலர் ஏன் தம் குழந்தைகளை பாராமரிக்க தவறுகின்றனர். அதாவது, கடனுக்கு பள்ளிக்கு அனுப்புவது  , அவர்கள் படிக்கிறார்களா ? , பள்ளிக்கு செல்கின்றனரா...? எந்த வகுப்புக்கு செல்கிறான் என்பது கூட தெரியாமல் இருப்பதை அறிய வருகிறேன். "சார், இரண்டாம் வகுப்புன்னு தான் அவுங்க அம்மா சொன்னாங்க ...சும்மா பார்க்க வந்தேன் .." என கூறும் தகப்பனை பார்த்திருக்கிறேன் .  "சார், பையன் ரெம்ப சேட்டை செய்கிறான், கொஞ்சம் கண்டுச்சு வைங்க ..."."சரிங்க ...பையன் எந்த ஆசிரியரிடம் படிக்கிறான் ....ஆசிரியரை அழைத்து வாருங்க..." ."அதான் சார், சிவப்பா இருப்பாங்கள் ..." " யாரு , ...."என டீச்சர் பெயரை சொல்லி .. கேட்டால் "சார், பேரெல்லாம் தெரியாது ...அதான் சார் மேல இரண்டாவது வகுப்பு ..." "இல்லையே ..மூன்றாம் வகுப்பில அப்பாடி யாரும் இல்லையே...." "சரி ...வகுப்ப சொல்லுங்க ...." " சார்...மறந்துட்டேன்..நானே போய் பையான குப்பிட்டு வரவா..." என தன் பையனின்   வகுப்பு தெரியாத தாய்மார்கள் அதிகம் .


    இவர்களை விடுங்கள் ... எத்தனையோ மாணவர்கள் தம் பெற்றோர்களை பார்க்காதவர்களாக தம் பாட்டியின் வீட்டில் வளர்கிறார்கள். இரண்டு தாரம் உள்ள அப்பா, அதனால் பிரிந்து வாழும் அம்மாவின் குழந்தைகள், வேறு ஒருவருடன் குடும்பன் நடத்தும் அம்மா,அம்மாவை பிரிந்து வாழும் தந்தை உள்ள குழந்தைகள், அம்மாவும், அப்பாவும் இது போன்று ஓடி விட தந்தையின் பெற்றோருடன் வாழும் குழந்தைகள், இருவரும் இருந்தும் வேலைக்கு செல்வதால் காலை முதல் மாலை எட்டு மணிவரை கவனிப்பாரற்று வளரும் குழந்தைகள் ....என தினமலர் செய்தியை உறுதி செய்யும் தகவல்கள் ....


    நம்மிடம் வரும் குழந்தைகளை நாம் தயவு செய்து விசாரிக்க வேண்டும் ...அப்போது தான் அவனின் தேவைகள் என்ன என்பதை உணர்ந்து நாம் கல்வி கொடுக்க முடியும். பசி  ஏக்கத்தில் உள்ள ஒருவனுக்கு நாம் எப்படி கல்வி கொடுத்தாலும் அது அவன் மண்டையில் பதியாது . ஆசிரியர்களாகிய நாம் நம்மிடம்  பயிலும் குழந்தையின் அடிப்படை தகவல்களை சேகரித்து ,மாணவனின் உளவியல் பிரச்சைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனுக்கு நாம் கீழ் படித்தல், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல், பொய் பேசக்கூடாது, அடுத்தவர் பொருட்களை  தொடக்கூடாது,அன்றைய பாடங்களை அன்றே முடித்து விட வேண்டும் , நேரம் தவறக் கூடாது . என்பது போன்றே பண்புகளை கற்று அவர்களிடம் இப்பண்புகள்  வளர நாம் தினமும் முயற்சி எடுக்க வேண்டும்.


    தொட்டில் பழக்கம் சுடுகாடு  மட்டும் என்பதால் இளமையில் நாம் அவர்களை நற்பண்புகளுடன் வளர்த்தால் , அவர்கள் நாளை ஆர்குட் சென்று பாலியல் சம்பந்தமான மோசமான வார்த்தைகளில் உரையாடுவதை செய்ய மாட்டார்கள். மேலும் அவாறு தவறு செய்யும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் வளர்க்க வேண்டும். நான் சொல்வது போல பல பெற்றோர் இல்லாத மாணவர்களை ஆசிரியர்களாகிய நாம் தான் பெற்றோர் போல பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.
 
       ஆசிரியர் பணி என்பது வெறும் கருத்துகளை, தகவல்களை , அறிவுசார்ந்த விசயங்களை மட்டும் கற்று தருவது என்று எந்த நிலையிலும் கருதி வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இனியாவது தன் நிலை உணர்ந்து , தம் குழந்தைகளாக மாணவர்களை கருதி உளவியல் அடிப்படையிலான  நல்ல பண்புநலன்களை கற்று தரவேண்டும்.அப்படி பண்புகள் கற்று தருவது தம் கடமை அல்ல, வெறும் சாக்குகட்டிகளை கொண்டு கரும்பலைகையுடன் போராடுவது தான் ஆசிரியர் பணி என்றால் , தயவு செய்து இப் பணியை ராஜினமா செய்து விட்டு , நல்ல தொரு தொழிலில் ஈடுபடவும்.

Thursday, August 5, 2010

பாதுகாப்பு நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ...

      கனவுகளுடன் கற்பனைகளுடன் குழந்தைகளை ஆசை ஆசையாய் பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புவதை பார்க்கும்  போது நமக்கு இளமை திரும்புவது போல் இருக்கிறது. காலையில் எழுந்து தன் பிள்ளைக்கு பணிவிடைகள் செய்து அவர்களை அழைத்து வந்து , வகுப்பு ஆசிரியர் வரும் வரை காத்திருந்து, அவனது நேற்றைய வீட்டு பாடம் குறித்து பேசி, அவனின் நிறைகளில் மகிழ்ந்து, குறைகள் கலைக்க ஆசிரியரிடம் முயற்சி எடுக்க சொல்லி, ஆனந்தம்  அடைந்து செல்லும் பெற்றோர்கள் , தாம் படிப்பதாகவே உணர்கின்றார்கள்.


     ஆனந்தமாய் ரசித்து ,  அவர்களின் சந்தோசத்தை அதிகரிக்க ஆசிரியர்களை நன்றாக கவனித்து சொல்லி கொடுங்கள் என்று சொல்லும்போது , என் குழந்தையை  படிக்க வைப்பது போன்ற உணர்வு. ஒவ்வொரு  ஆசிரியரும் தம்மிடம் பயிலும் குழந்தைகளை தம் குழந்தைகளாக நினைத்து , பாடம் கற்றுத் தந்தால் , பிரம்பு தூக்கும் வேலையும் , வார்த்தைகளினால்  மனதில் வலியினை ஏற்படுத்தும் தன்மையும் மறைந்து போகும்.
இடைநிறுத்தம் என்பதும் குறைந்து போகும்.

         காலை பொழுதினை பெற்றோர்களின் வருகையால் மன நிறைவுடன் கழிப்பதால் , என்றும் நான் இளமையாய் இருப்பதாகவே உணர்கின்றேன். நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்த எந்த ஆசிரியரையும் நீண்ட நாளுக்கு பின் பார்த்தாலும் அவர் அப்படியே இளமை குறையாமல் இருப்பதாகவே உணர்வீர்கள். அதற்கு காரணம் , ஆசிரியர்களாகிய நாங்கள் என்றும் இளையவருடன் பழகுவதாலும், என்றும் நிறைகளுக்காக போராடுவதாலும், மனம் மகிழும் கதைகளை ரசித்தது மாணவர்களுக்கு சொல்வதாலும், குழந்தை மனதுடனே இருப்பதாலும், எந்தவித டென்சனும் அட்படுத்தாமல் இருக்க மாணவர்கள் செய்யும் அனைத்து சேட்டைகளையும் மனநிறைவுடன் ரசிப்பதாலும், உண்மையான கோபமின்றி , அன்பாய் மாணவனை திருத்துவதாலும் இளமையாகவே இருக்கிறோம்.
தருமி ஐயா அவர்களை பாருங்கள் இளமை ,என்னுடன் போட்டி போடுகிறது. அவர் என்றும் மாணவர் பக்கம் இருந்து ,தோழமை உணர்வுடன் மாணவனுடன்  மாணவனாகவே கல்லூரியில் உலாவுவதால் , என்றும் இளமை மாறாமல் இருக்கிறார்.


                இன்றும் காலையில் அதே துள்ளலுடன் மகிழ்ச்சியாக வழக்கம் போல் ஒன்றாம் வகுப்பு   மாணவர்களை பார்வையிட சென்றேன். அப்போது வகுப்பு ஆசிரியர் ஒரு பெற்றோருடன் பேசி கொண்டு இருந்தார் .  நானும் வழக்கம் போல் , விசாரிக்க சென்றேன்,எனக்கு துக்கம் தொண்டை அடைத்தது. அழுகின்ற பெற்றோருக்கு எத்தனை வார்த்தைகள் சொன்னாலும் , அந்த வலி  ஆறாது.

             "சார், இவங்க போன வாரம் கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு போனாப்ப  ...போன இடந்தில பாம்பு இவங்க இரண்டாவது பையனை கடித்து ,அவன் இறந்து விட்டான். ..."

        "சார்...அவனும் அக்காவோட பள்ளிக்கூடம் போகணும்ன்னு சொன்னான்...."

"ஆமாம்...சார்,,,போன வராம் என்னிடம் வந்து அவனை இவளுடன் அனுப்புகிறேன் ....நான்கு வயசு தான் ஆகிறது...இருந்தாலும் படிக்க ஆசை படுகிறான்....ஒரு வாரம் ஆவலுடன் பள்ளிக்கு வர அனுமதி கேட்டார்...."

"சார்....என்புள்ள ஆசை ஆசையா ஸ்லுக்கு வர ஆசைப்பட்டான்...இருந்தாலும் கொடுத்து வைக்கல....ரோட்ட கிராஸ் தான் செஞ்ஞான்....அதுக்குல்ல்ல...ஒரு குட்டி பாம்பு ..தாண்டி போன மாதிரி தெரிஞ்சது....அதுகுள்ள நூரை தள்ளி ....”என அழுகத் தொடங்கினார்.

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடினாலும் கிடைக்க வில்லை. .இருப்பினும்...”சரி வ்டுங்க அண்ணே...நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்.... இந்த பொம்பளைப்பிள்ளையாவது நல்லா...படிக்க வைங்க....” என அவரை சாமாதனப்படுத்தி அனுப்பினேன்.


    பெற்றேர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்..தோட்டம் , கம்மாய், ஏரி, மற்றும் வயல் சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது , இது போன்று துர் நிகழ்ச்சி நடக்காத வண்ணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    
வெட்ட வெளியில் படுத்து உறங்கும் போது பாதுக்காப்பான இடமாக இருக்கிறதா தெளிவாக அறிந்த பின் படுக்கவும். டார்ச் வைத்துக் கொள்ள வேண்டும்.

சூ , சாக்ஸ் நன்றாக தட்டி, உதறிய பின் தான் அணிய வேண்டும். வெகுநாளாகிய புத்தகப் பைகளை நன்றாக பரிசோதித்த பின் மாணவனுக்கு கொடுக்கவும்.

   வீட்டுக்கருகில் உள்ள தண்ணீர் தேங்கும் இடங்களில் குப்பைகள் சேர விடக் கூடாது.அவ்வப்போது சேரும் குப்பைகளை உடனே எடுத்து , உரிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பள்ளி வாளகத்திலும் இதே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

     உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும். தண்ணீர் குடம், தொட்டிகளை மூடு , பாதுகாத்து, அவற்றை சூடுபடுத்தி அல்லது சுத்திகரித்து குடிக்க பயன் படுத்த வேண்டும்.
  
    மாண்வர்களை தம் உடையை உடுத்தும் போது , அவற்றை நன்றாக உதரி , பூச்சி எதுவும் ஓட்டி உள்ளதா என சரிப்பார்த்து உடுத்த செய்யவும்.


    விளையாடி வீட்டுக்கு வரும் குழந்தையை நாம் கை , கால் கழுவிய பின்புதான் உணவு உண்ணச் செய்ய வேண்டும்.

            தயவு செய்து கனவுகளுடன் வாழும் பெற்றோரே , பாதுகாப்பு நமக்கும் நம் குழந்தைகளுக்கும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்....





        

Wednesday, August 4, 2010

கடவுளும் பிரார்தனையும்

அங்காங்கே
கொலை கொள்ளை ....

குழந்தை பசியாற
பால் வற்றிய
முலைக்  காம்புகள்
காமக் கரங்களில் ....

கண்கள்  மூடி
கைகள் கட்டி
குண்டுகள் துளைக்க மரணம்...

கால்கள் ஊன்ற
வலுவின்றி ....
வற்றிய தோலுடன் வறுமை ...

சொந்த நாட்டிலே
அன்னியனாய்  அவலம்...
உரிமை கோரினால்
உயிருக்கு இல்லை உத்தரவாதம் ....

இரத்தமும் சகதியுமாய்
ஆதிக்க பூமியில்
கையிழந்து காலிழந்து
கண்ணீரும் கதறலுமாய் ....

மனித குரல்கள்
இல்லை இல்லை
ஓலங்கள் ...

ஓ..! மனிதா ... !
நிறுத்த முடிய வில்லை
எல்லா இசங்களினாலும்
எம்மை சமாதனப்படுத்தினாலும் ....
இத்தனை வன்மையையும்
கொடுமையையும்
உன்னால் நிறுத்த முடியவில்லை
தடுக்கவும் முடியவில்லை !

என்னவோ தெரியவில்லை
எது நடந்தாலும்
உடனே அடைக்கலம்
கோவில்களிலும் , மசூதிகளிலும் , சர்ச்சிலும்
எந்த இசம் பேசினாலும் ....
கடவுள் என்ற முகம் தெரியாத
ஒருவனிடத்தில் ...
பாதுகாப்பை உணருகிறோம்...!

எங்கோ உடல் வற்றி
உயிரூட்டி பிரசவிக்கும்
குழந்தையின் அழுகுரலும்
தாயின் ஆனந்த கண்ணீராய்
கடவுளின் சுக்குலத்தில்
கடைசி சொட்டும்
கோடைமழையாய் ....
இத்தனை கவலைகளையும்
கரைக்க ...
ஆனந்தமாய் பாதுகாப்பாய் ...
இதை விட மோசமாய்
வாழ்வு அமையாமல் இருக்க
கடவுளே உன்னை பிராத்திக்கிறேன்....!


தெரிந்த இத்தனை முகங்களை விட
தெரியாத நீ
எனக்கு தைரியத்தையும்
பாதுகாப்பையும்  நிம்மதியையும்
தருவதால் ....
உன்னை பிரார்தனையில்
சரணடைகிறேன்...!

Tuesday, August 3, 2010

அரசே பார்

பாடமென்னவோ...
வாழ்த்துப்பாவுடன் தான்
ஆரம்பித்தது ...
வாழ்த்தும் ஏட்டுடனே 
முடிந்தது ...
காம்பிராமாய் இருந்த
கணித வாத்தியாரும்
கம்புடனே பாடம் ...
என்பதால்
ரயிலேறி ,பஸ் மாறி
திசை மாறி ...
அரசே பார்
என்னைப் பார் ...!
அரசோ பார் என்றது
இன்றும் நிலைமாறி
தடுமாறி ...
திசை மாறி
பேதையாய்
போதையில்....!

Monday, August 2, 2010

வெறுமை

  இன்று  வெறுமையாக உணருகின்றேன். ஒரு சாதாரண கொத்தனார் வேலை பார்ப்பவன் கூட தன் தொழில் நேர்த்தியை காட்ட ஏதாவது  ஒரு விதத்தில் முயல்வான். கலவை தயாரித்தல், செங்கல் தேர்ந்தெடுத்தல் , வீட்டு முகப்பு அமைப்பு குறித்து ஆலோசனை வழங்கல் என பல விதத்தில் அறிவாளியாக திகழ்வதுடன், வீட்டு உரிமையாளருக்கு உதவியாக இருந்து , அடுத்த வாய்ப்பு கிடைக்க தவம் இருக்கிறான்.


    சாதாரண ஆட்டோ ஓட்டுனர் கூட , தன்னிடம் வரும் பயணிகளை பாதுக்காப்பாக இறக்கி விட்டு, தன் அன்பான பேச்சால் , தொடர்ந்து அந்த பயணிகள் தன் ஆட்டோவில் பயணிக்க முயற்சி எடுக்கிறான். ஒரு கடை நிலை ஊழியன் கூட தன் பணியின் சிறப்பினை பிறர் உணர சிறப்பாக வேலை பார்க்கிறான் .
          குத்து விளக்காய் ஒளி தந்து எப்போதும் மேல் நோக்கியே எரியும் சுடரை போல் 
 அனைவரும் தம் பணியினால் இந்த சமூகத்திற்கு சேவை புரிவதுடன் , தம்மையும் அடையாளம் காட்டிக் கொள்கின்றனர்.

         ஆனால் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் இந்த ஆசிரிய பணியில் மட்டும் நாம் நம்மை அடையாளம் காட்டி கொள்வதை விட , பிறரால் அடையாளம் காணப்பட வேண்டும்.
        நம் பணியின் சிறப்பினை அன்பால், உண்மையான புரிதலினால்  , நாமே நம்மை ஒரு முன் மாதிரியாய் கொள்வதன் மூலமும் ,மாணவர்களை நண்பர்களாக பாவிக்கும் மனப்பக்குவத்துடன்,கண்டித்தலின்றி ஒருவித ஈர்ப்புடன் தவறை உணரும் புரிதலை ஏற்படுத்துவதை கொண்டும் , சமூகத்தால், பெற்றோர்களால் அடியாளம் காணப்பட வேண்டும்.

        இன்று செய்திதாளில் வரும் பள்ளி செய்திகள் நம்மை ஒரு சமூக விரோதிகளுக்கு இணையாக சித்தரிக்கப்படுவதை நினைக்கும் போது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மனம்  வெறுமை அடைகிறது  . நானும் சாமநியர்களில்  ஒருவனாக ஏதோ ஒருவர் செய்யும் தவறாக ஒதுக்க முடிய  வில்லை. இது நம் சமுகத்தில் புரையோடி கிடக்கும் அசுத்தமாகவே நினைக்கிறேன்.


     நான் என் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை எப்போதும் கவனித்து கொண்டு இருப்பதுடன் மாணவன்  படிப்பில் மட்டும்  கவனம் செலுத்த சொல்ல வில்லை .அவனின்
ஒழுக்கம் , பிற மாணவர்களுடன் பழகும் விதம், மதிய உணவு அருந்துமிடம், விளையாடுமிடம், வகுப்பறை என எல்லா இடங்களிலும் மாணவனின் கண்காணிக்க செய்வதுடன் ஆசிரியர் மாணவனுடன் இருக்கவும் , அவனுடன் பழகவும் , அவனின் குடுப்பம் , உறவினர் ,வீட்டருகே நண்பர் பற்றி தெரிந்து கொள்ளவும் செய்கின்றேன்.
      
      நானும் மாணவர்களுடன்  நட்புடன் பழகுவதால், மிகவும் மகிழ்ச்சியாகவே  என் வாழ்வை உணருகிறேன். மாணவரும் என்னை எளிதில் அணுகுவதால் ஒரு தலைமை ஆசிரியன் என்ற உணர்வையும் மறந்து எந்த ஆசிரியரும் திட்டினாலோ, அடித்தாலோ, உடனே என்னிடம் வந்து சொல்லுவதுடன்,"சார்,பாவம் சார், டீச்சர் , அடிக்காம பார்க்க சொல்லுங்க " என அன்பாய் சொல்லும் பக்குவம் பெற்றுள்ளனர். அதுவும் அடித்தவுடன் அன்றே வருவது இல்லை ,தொடர்ந்து அவர் அடிப்பதாக உணர்ந்தால் மட்டுமே வருவார்கள். அதிலும் ஒன்றாம் வகுப்பில் மாணவன் வந்து சொல்லுவது மிகவும் கொடுமை. . "அண்ணே....அந்த டீச்சர் ...அடிக்கிது....நான் உன்கிட்ட வரேன்..." என்று ஒரு சகோதரனாக சொல்லவது எனக்கு வேதனை தருகிறது  .

          மிகவும் வருந்த தக்கது ....அவரை கண்டித்தால் அவர் ,"சார் ...நான் அடிக்கிறதே இல்லை , என்னை பார்த்தாலே பயபடுகின்றனர்..." என மழுப்பலான பதில் வரும் . கோபப் படுவதை    தவிர வேறு எதுவும் என்னால் செய்ய இயலாது. மேலும் அதையும் மீறி ஒரு மெமோ கொடுப்போம் என்றால் அந்த ஆசிரியர் அடிக்கிறார் என்று புகார் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். என்றாவது ஒருநாள் யாரவது எழுதி கொடுத்தால் நிர்வாகம் , "சார், உங்களுக்கு அந்த  ஆசிரியரை கண்டாலே பிடிக்காது ...இத போய் பெருசு படித்திகிட்டு .எழுதி வங்கிட்டீங்களே ,பெற்றோரை சாமதானம் பண்ணி அனுப்பி விடுங்க "என நமக்கே அந்த ஆயுதம் திரும்பி வரும். பின்பு ஆறு மாதம் இந்த பயமுறுத்தல் மாணவர்களை காப்பற்றும்.
     பிரச்சனை எனக்கு மட்டும் விதி விலக்கு  அல்ல , என்னை போன்ற அனைத்து தலைமை ஆசிரியருக்கும் தான் . முளையிலே கண்டிக்க தவறும் போதும் ,ஆசிரியர் தம் தவறை உண்மையாய் உணராத போது  மட்டுமே , மாணவனை அடித்தல் என்பது பெற்றோரால் பெரிதாக உணரப்படும் போது, மீடியாவால் பெரிசாக்கப்பட்டு , அசிங்கபடுத்த படுகிறார்கள் .பள்ளிக்கும் , நிர்வாகத்துக்கும், தலைமை ஆசிரியருக்கும் , குறிப்பிட்ட அந்த ஆசிரியருக்கும் அசிங்கம்.

    இரண்டாவது ,பாலியல் வன்முறை...
           இது குறிப்பாக நடு நிலை ,உயர்நிலை, மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் நடைபெறும் தவறாக செய்தி தாளில் வருகிறது. என்னுடைய சந்தேகம் எல்லாம் , எப்படி மாணவர்கள் தனிமை படுத்தப் படுகிறார்கள். தனிப்பட்ட ஒரு மாணவியை ஆட்டுமந்தையில் இருந்து  பிரிப்பது போன்று , தனிமை படுத்தி, தம் மகள் வயதை ஒத்த சிறுமி அல்லது சிறுவன் மீது ...சொல்ல வாய் கூசுகிறது.    
   நான் இந்த  விசயத்தில் அனைத்து ஆசிரியரையும் குறைக் கூற கடமை பட்டுள்ளேன். ஒரு ஆசிரியர் நடவடிக்கை பற்றி கட்டாயம் சக ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது. உண்மையில் மாணவனுடன் நன்றாக ஆசிரியர் உறவு முறை பேணப்பட்டால், நிச்சயம் எவனாவது ஒருவன் , தலைமை ஆசிரியருக்கோ , அல்லது தன் வகுப்பு ஆசிரியருக்கோ,அத் தவறை உணர்த்துவான். தலைமை ஆசிரியரே தவறாக நடந்து கொண்டாலும் தன் வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவிப்பான்.

     என் பள்ளியில் நான் துவக்க பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தாலும், என்னிடம் பயின்று மேல் வகுப்பில் பயிலும் மாணவர்கள் தங்கள் வகுப்பு ஆசிரியர் திட்டுவதையும் , ஜோக் சொல்லுவதையும் , பிற மாணவர்கள் செய்யும் சேட்டையும் சொல்லுவார்கள். அது மட்டும்  அல்ல ...பேச்சு , கட்டுரை , நடன போட்டிகளில் பங்குகொள்ள ஆலோசனை மேற்கொள்ளுவார்கள். என்றும் பல மாணவர்கள் என் பள்ளியில் தன் ஒன்றாம் வகுப்பு, மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியருடன் தொடர்பு கொல்வதை காண்கிறேன். ஆலோசனை பெறுவதையும் , தன் வகுப்பில் நிகழும் நிகழ்வுகளையும் சொல்வதை பார்க்கிறேன். (இவை அனைத்தும் ஒரே காம்பசில் இரு பள்ளிகள் இயங்குவதால் உணர்கிறேன்)  


     ஒட்டு மொத்த தவறின் வெளிப்பாடு தான் ...பள்ளியில் பாலியல் கொடுமை . அத் தவற்றை தண்டிக்க தவறும் அப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் தண்டிக்க பட வேண்டியவர்களே  ....இவர்களை பாலியல் வன்கொடுமையின் சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்க வேண்டும். தன் குழந்தையை ஒருவன் இப்படி செய்தால் சக ஆசிரியர்கள் விடுவார்களா...? தனக்குத் தெரியாது என்று சப்பைக்கட்டு கட்டுவதே பிழைப்பு ...என் வர்க்கத்தை குறை கூறுவதில் நான் வருந்தவில்லை, இருப்பினும் என் பணியின் மீது  ஒரு வெறுமை உணருகிறேன்.

            பொறுப்பின்றி இச் சமூகத்தின் மிகப்  பெரிய பொறுப்பை வகிக்கும் ஆசிரியர்கள் ,
தவறுகளுக்கு உடந்தையாக இருப்பதை கண்டிக்கிறேன். தனக்கு என ஒரு வாழ்க்கை இருப்பதாக உணரும் யாரும் தயவு செய்து இந்த அறப்பணியை ஒரு தொழிலாக  , அல்லது ஒரு பிழைப்புக்கு வழியாக கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டாம். சமூகத்திற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் , முடிந்தளவு சமூகத்திற்கு பயந்தாவது நடக்க கற்றுக் கொள்ளவேண்டும். ஒரு சிறு தவறுக்கு கூட இடம் தரக்கூடாது. பொய் பேசுவதற்கு கூட தயங்க வேண்டும் .( நான் ஆறாவது படிக்கும் போது என் கணக்கு வாத்தியார் புகைப்பதை கூட மாணவர்களுக்கு பயந்து ஏரியா விட்டு ஏரியா செல்வார்.ஏதாவது சீருடை தெரிந்தால் தான் புகைப்பதை தூக்கி எரிந்து விடுவதை பார்த்திருக்கிறேன். )
 

      ஆசிரியர்கள் நம்மை நாமே திருத்தாவிடில் ,சமூகத்தில்  முதல் குற்றவாளியாக விளங்குவோம். நாம் நம்மை உணர வேண்டும். பெற்றோர்களும் தம் குழந்தையின் மீது அக்கறை செலுத்துவதுடன், வாரம் அல்லது மாதம் ஒருமுறை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், சக மாணவர்கள் சந்தித்து தம் பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாட வேண்டும். பள்ளியில்  முறையாக பெற்றோம் ஆசிரியர் கூட்டம் நடைபெறுமானால் , அனைத்து தவறுகளும் நடக்க வழியில்லை.