Thursday, September 1, 2016

அப்பா கிட்ட பேசி இருக்கீய்யா? கொஞ்சம் யோசிங்க!




*
சமூக அறிவியல் பாடம் நடத்தும் முன் வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்கள் குறித்து கூறுவது வழக்கம். இன்று மகாத்மா ஜோதிராவ் புலே குறித்து தெரிந்து கொள்வோம் என்றேன்.
மகாத்மா ன்னா காந்தி தானே ? என கேட்டாள், யுவராணி.
காலையிலே இன்று யாரை பற்றி கூற போகின்றீர்கள் என விசாரித்து , புலே பற்றி புத்தகத்தில் வாசித்திருந்த யோகேஷ் , " அவரு சுதந்திரம் வாங்கி தந்த்தால் மகாத்மா , இவர் இந்தியாவில் சமூக புரட்சி செய்ததால் மகாத்மா என்று கூறினான்.
புலே திருமண நிகழ்வில் கீழ்சாதி என விரட்டபட்ட பின்பு, ஏகத்துக்கும் புத்தகம் வாசித்தார். தாமஸ் பெய்னின் மனித உரிமை நூல் , அவரை ஈர்த்தது. அதில் சொல்லப்பட்டிருந்த விசயம் சார்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். அடிமைத்தனம் என்ற புத்தகத்தை எழுதினார். அந்நூலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து எழுதினார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு கல்வி அவசியம் என எடுத்துரைத்தார். மனைவி சாவித்திரிபாய் வுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட , இல்லை , அன்று ஒட்டு மொத்த இந்திய பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார். உயர் சாதி மக்கள் கலவரம் செய்தார்கள். கல் எறிந்தார்கள் . அவரது தந்தை இவர்களின் தாக்குதலுக்கு பயந்து அவர்களை வீட்டை விட்டு துரத்தினார்.
" தற்போதைய சமுக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போது தான் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படிவதை தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக_பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும் " என்ற ஜோதிராவ் புலே வரிகள் இன்றும் பொருத்தமாக உள்ளதை குறித்து சிந்தியுங்கள் என முடித்தேன்.
" சார்,
உண்மையிலேயே ஜோதிராவ் புலே அப்பா, அவரை வீட்டை விட்டு துரத்திட்டாங்களா? " என கேட்டாள் அம்மு.
ஆமாம். உயர்சாதியினர் கெடுபிடி. இதை பத்தி இப்ப புரியாது. வளர வளர நிறைய புத்தகம் வாசிக்க தெரிஞ்சுக்குவீங்க.இப்ப சார் ஒரு விசயம் கேட்பேன் , சொல்லுவீங்களா ? "
" சார், கேளுங்க சொல்றோம்"
"நீங்க உங்க அப்பா கிட்ட பேசி இருக்கீங்களா?"
அனைவரும் ம் என ஒரு குரலில் கத்தினர்.
" ஒவ்வொருத்தரா சொல்லணும் . கடைசியா, உங்க அப்பகிட்ட பேசியது குறித்து சொல்லுங்க "
சார், சார் என கையை உயர்த்த ...ஆதீஷ்வரன் என்றேன்.
" எங்க அப்பா எப்பவும் நைட் ரொட்டி தருவாரா? நேத்து அவரு ரொட்டி வாங்கிட்டு வரலை.. எங்க அம்மா எங்க அப்பா கிட்ட கேட்க சொன்னாங்களா...அப்ப எங்கப்பாட்ட போய்யீ..அப்பா அப்பா இன்னைக்கு ரொட்டி வாங்கலைய்யான்னு சொன்னேன். எங்கப்பா நாளைக்கு வாங்கி தர்றேன்னு சொன்னார்..."
" டேய் சார் கிட்ட ஜாலியா பேசுற மாதிரி ... பேசி இருக்கீய்யா...? "
" ம்...ஒரு தடவை எங்க பாப்பா வேகமாக ஒடி வர்றேன்னு கீழே விழுந்துட்டா.. எங்கப்பா அழுதுகிட்டே வந்த அவள பார்த்து போ கழுதை போ ..போ ன்னு சொன்னார்..இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.. அவ வந்தா போ கழுதை என்று சிரிப்போம் " என்றான்.
சரி வேறு யாராவது ...பெண் குழந்தை என்றவுடன் தர்ஷினி சொல்ல ஆரம்பித்தாள்.
" கடைசியா ஞாயித்து கிழமை பேசினேன். ? "
" நேத்து பேசலைய்யா? "
" இல்லை சார., எங்கப்ப்பா வாரத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவாங்க..? அதான் . "
" என்ன பேசின..? " என கேட்டான் ஆதிகர்ணன்.
" அப்பா , அப்பா டெய்லி உங்கள் பார்க்கணும்.ஊர்க்கு போயி வேலை பார்க்காம இங்கய்யே வந்துடுங்கன்னு சொன்னேன் " என்றாள்.
" வெளியூரில் என்ன வேலை பார்கிறார். எந்த ஊர்? " என கேட்டேன்.
" எந்த ஊர்ன்னு தெரியலை...ஊர் ஊர் போய் மிக்சர், பக்கோடா வித்துட்டு வருவார்ன்னு அம்மா சொன்னாங்க "
" சரி உங்க அம்மாட்ட பேசுவய்யா ? " என கேட்க,
உதடுகளை பிதுக்கி இல்லை என்றாள்.
ஏன் ?
" எங்கம்மா வேலைக்கு போறாங்க..்சாய்ங்காலம் வந்தா , எங்க தாத்தா வை பார்க்க பக்கத்தில் போய்டுவாங்க..தூங்கின உடனே தான் வருவாங்க.."
" அப்ப நைட் சாப்பாடு..."
" பக்கத்தில் ஒரு அத்தை கவனிச்சுக்குவாங்க.."
அவுங்க கிட்ட பேசுவய்யா?
" ம்..."
என்ன பேசுவ...?
" அவுங்க குட்டி பார்ப்பாவை சாய்ங்காலம் நான் தான் பார்த்து கொள்வேன். அவ பண்ற சேட்டையை சொல்வேன் .சிரிப்பாங்க "
" யாராவது பள்ளியில் நடக்கிற விசயங்களை பேசுவிங்களா? "
அனைவரும் அமைதியாக புரியாத வாறு இருந்தனர்.
" டேய்..உன் பரண்டு அடிச்சது...சார் திட்டினது இல்லை பாராட்டினது... நம்ம ஆத்துக்கு போனது...உங்க வீட்டு பக்கம் என்ன மண்ணு இருக்கு என்ன செடி வளருது...சொன்னது ..ஜாலியா சினிமா பத்தி " என விளக்கினேன்.
" அது வந்து சார்... "
சினிமா என்றதும் ஆதிகர்ணன் வேகமாக,
" சார், நேத்து நான் ...புட்டு வேணும்ன்னு எங்க அம்மா கிட்ட கேட்டேன். அப்ப ..எங்ம்மா உங்கப்பா கிட்ட கேளுன்னு சொன்னாங்க..நான் உடனே ..அம்பிகா தியேட்டர் போய் ...எங்கப்பா கிட்ட காசு கேட்டேன். உடனே கொடுத்துட்டார் . " என்றான்.
அவனின் அப்பா அம்பிகா தியேட்டரில் வேலை பார்க்கிறார்.
என் அருகில் இருந்த அன்புக்குரியவனை நீ அப்பா கிட்ட எப்ப பேசின...? என கேட்டேன்.
" சார், கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க பாப்பா ஓடி வர்றேன்னு கீழே விழுந்துடுச்சு, பக்கத்துல இருந்த சாக்கடையில் விழுந்து டிரஸ் அழுக்காகிடுச்சு...எங்கப்பா நல்ல குழந்தைகள் கிட்ட சேர்ந்தா நிதானமா வருவ என சொன்னாரு...எங்கம்மா அதுக்கு இங்க நான் ஒருத்தி துவைக்கிறதுக்கு இருக்கேன்ல ன்னு சொன்னாங்க... எங்கப்பா சிரிச்சுகிட்டு ...தோய்க்க தானே இருக்க நீன்னு சொன்னாரு.....அதுக்கப்புறம் ஜெயிலுக்கு போயிட்டார்..."
இப்படி ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடம் தேவைகளை கேட்பதையும், பெற்றோர்களிடம் திட்டு வாங்குவதையும் பேசுவதாக கூறினார்கள்.
தமிழ் வழி கல்வி குழந்தைகள் மட்டும் அல்ல . அனேகமான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நல்லது கெட்டதுகளை பகிர்ந்து கொள்வதில்லை் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் நல்லா படி , அதை செய்கிறேன் என்ற கண்டிசன் உடனே குழந்தைகளுடன் பொழுது கழிப்பதாக உணர்கின்றேன்.
கல்வி கொள்கை உருவாக்குபவர்கள் இதை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை. எந்த சிலபஸ்சிலும் இவர்களின் சிக்கல் குறித்து பேசப்படுவதில்லை. ஆனால் , எதை பத்தியும் கவலை கொள்ளாமல் மாணவர் நலம் பற்றியும் யோசிக்காத புதிய கல்வி கொள்கை குறித்து விவாதித்து தெளிவு பெற வேண்டும்.
மதுரை சரவணன்

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை.மிக நல்ல அணுகுமுறை . எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். அல்லது அவர்களை பேச வைப்பார்கள்? உங்களைப்வா போல்ழ்த்து ஒவ்வொரு ஆசிரியரும் செய்தால் இடை நிற்றலே இருக்காது
வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

புதிய கல்வி முறை பற்றிப் பேச சந்தர்ப்பம் வந்ததா நீங்கள் கருத்துகளைச் சொன்னீர்களா.

Post a Comment